

அமைவிடம்:
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் இருந்து வடக்கே சுமார் 2-3 கி.மீ தொலைவில், பாமணி எனுமூரில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இக்கோவில், தற்போது நாட்டுக்கோட்டை செட்டியார்களால் பராமரிக்கப்படுகிறது. இத்தலத்து இறைவன் மீது பாம்புகள் அடிக்கடி ஊர்ந்ததால் இவருக்கு பாம்பை மேலே அணிந்து கொள்பவர் என்ற பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரும் உண்டு. அதனால் இந்தத் தலத்துக்கு பாம்பணி என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் பாமணி என்று மருவிற்று. ஆதிசேடன் நாகநாதரை பூசிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயரும் உண்டு. ஆதிசேடன் இத்தலத்திற்கு வந்தபோது தலம் எங்கும் சிவலிங்கமாய் தெரிந்ததால், கால் தரையில் படாமல் இறைவனை தொட்டு வணங்குவதற்காக இடுப்பிற்கு கீழே பாம்பு ரூபமாயும், மேலே மனித ரூபமாயும் இருந்து வணங்கினார். பாம்பு உருவாக்கிய லிங்கம் என்பதால், அது புற்றுவடிவாக அமைந்தது.
தலசிறப்புகள்:
மூலவர்: நாகநாதர், சர்ப்பபுரீசுவரர்தாயார்: அமிர்த நாயகி.
தலவிருட்சம்: மாமரம், தீர்த்தமாக நாகதீர்த்தமுள்ளது,
சம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலம்.
இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர் என்றாலும் அவருக்கு தினமும் அபிசேகம் நடைபெறுகிறது, மனித முகம், பாம்பு உடலுடன் காட்சியளிக்கும் ஆதிசேஷனுக்கு, இத்தலத்தில் தனி சன்னதி இருப்பது சிறப்பாகும். அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அட்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேடன். இந்த ஆதிசேடனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோசம், ராகு கேது தோசம், கால சர்ப்ப தோசம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவார்கள் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேடனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோசங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் பரிகாரம் செய்யும்போது சர்ப்ப தோசம் மறைந்து விடுவதாகவும், தொடர்ந்து யோகம் ஏற்படுவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
மேலும், திருமணத் தடை, புத்திர பாக்கியம், கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட கருத்த வேறுபாடுகள் நீங்கவும் இத்தல இறைவனை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்