

அமைவிடம்:
திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் நகரிலிருந்து 3km தொலைவில் நீடாமங்கலம் –
மன்னார்குடி சாலையில் உள்ள பூவனூர் எனுமூரில் பாமினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
இந்த ஆலயம், 1000 – 2000 ஆண்டுகள் பழமையானது. வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கப்போட்டியில் இறைவன் வெற்றி கொண்டு மணந்ததால் இத்தல இறைவனாருக்கு சதுரங்க வல்லபேசுவரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் சிறந்தவன் என்று கூற, மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு இறைவனுடன் வேண்டினார். இறைவனும் ராஜேஸ்வரியுடன் சதுரங்கம் ஆடினார். ஆட்டத்தில் இறைவன் வென்றார். பின்னர் தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அதனால் இறைவன் சதுரங்க வல்லபநாதர் என்றழைக்கப்படுகிறார்.
தலசிறப்புகள்:
மூலவர்: சதுரங்க வல்லபநாதர், சதுரங்க வல்லபேசுவரர், புஷ்பவன நாதர்.
தாயார்: கற்பகவல்லி, ராஜ ராஜேஸ்வரி (தனித்தனி சந்நிதிகள்),
தலவிருட்சம்: பலா மரம், தீர்த்தமாக புஷ்கரிணி தீர்த்தமுள்ளது,
சம்பந்தர், அப்பரால் பாடல்பெற்ற திருத்தலம்.
அப்பரின் பதிகத்தில் “ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே” என்று இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருப்பதிகக் கோவை மற்றும் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா ஆகியவற்றில் இத்தலம் போற்றிக் கூறப்பட்டுள்ளது. விஷ்ணு, பிரம்மா, இந்திரன், விநாயகர், முருகன், அகத்தியர் சுகமுனிவர் ஆகியோர் பூசை செய்து வழிபட்ட திருத்தலம்.
கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலையை அடுத்து இங்கு சாமுண்டீஸ்வரி கோவில் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். சாமுண்டீஸ்வரி இங்கு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். எலிக்கடி மற்றும் பிற கடிகளால் பாதிக்கப்பட்டு துன்புறுவோர் ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி சன்னதியின் முன்பாக கையில் வேர் கட்டிக்கொண்டு கோவிலின் முன்பாக அமைந்துள்ள பாற்குளம் என்ற பெயர் பெற்ற கோவில் குளத்தில் நீராடி நலம் பெறுகின்றனர்.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சதுரங்க வல்லப நாதரைப் பிரார்த்தனை செய்து வழிபடக் குணமாகிறது என்பது நம்பிக்கை. பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டால் விரைவில் அது சரியாகவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் குறைவின்றி அருள்கிறார்.
இத்தலத்தில்தான் அகத்தியர் போகருக்கு விசக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளைப் போதித்தார் என்று கூறப்படுகிறது.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்