நன்னிலம் மதுவனேசுவரர் திருக்கோவில்

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 16-23 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழித்தடத்திலும், நன்னிலம் பேருந்து நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது.

சுந்தரர் தேவாரம் திரு சற்குருநாத ஓதுவாரின் குரலில்

தலவரலாறு:

விருத்திராசுரன் என்ற அசுரனின்  துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்டதால் மதுவனம் என்றும் பெயர் பெற்றது. ஈசனின் சிருஷ்டிகளில் அவனை வழிபட ஈ, எறும்பு, தேனீ, பாம்பு என்று எல்லா ஜீவன் களுக்கும் உரிமையுண்டு என்று காட்டும் தலங்களில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில் அமைப்பாகும், ‘கட்டுமலைக் கோவில்’ தொழில் நுணுக்கத்திலேயே இந்த ஆலயமும் 
அமைந்துள்ளது.

தலசிறப்புகள்:

மூலவர்: மதுவனேசுவரர், தேவாரண்யேசுவரர், பிரகாச நாதர். தாயார்: மதுவனேசுவரி, தேவகாந்தார நாயகி, பெரிய நாயகி, பிரகாச நாயகி.
தலவிருட்சம்: வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம் ஆகியன,
தீர்த்தமாக பிரம தீர்த்தம், சூல தீர்த்தம் உள்ளது.
சுந்தரரால் பாடல்பெற்ற தலம். அகத்தியர் வழிபட்ட தலம். குபேரன், இந்திரன், யமன், வருணன் ஆகியோர் முறையே வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு முதலான திசைகளில் வழிபட்ட திருத்தலமிது. சூரியன், பிருகத்ராஜன் ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

கோவிலின் கர்ப்பகிரகத்திலும் ,அதன் சுற்றுப்பிரகாரத்திலும் உள்ள மறைவிடங்களில் யாருக்கும் தீங்கு இழைக்காமல் இன்றும் தேனீக்கள் வாழ்கின்றன.
இங்கு பிரமன் வழிபட்ட பிரம்ம்புரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் உள்ளன.

மூலவர் சதுர ஆவுடையார் மீது சற்றுயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனிபகவானும், சித்ர குப்தனும் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

அமுதத்திற்கு நிகரான, நிவேதனத்தில் சமர்ப்பிக்கப்படும் மதுபர்க்கம் எனும் தேனால் ஈசனை அபிசேகம் செய்ததால் இவருக்கு  மதுவனேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. தேனில் இனிப்பு தவிர வேறெந்த சுவையும் இருக்காது.  அதுபோல மதுவனேஸ்வரர் நம் வாழ்வில் இன்பங்களை மட்டுமே அருள்வார். இவருக்கு தேனால் அபிசேகம் செய்து, மலர் மாலை சூட்ட, வாழ்வு மணக்கும் என்பது உறுதி. மதுவனேஸ்வரர் எனும் திருநாமமிட்டுள்ளதால் மயங்கவைக்கும் சகல கலைகளுக்கும் அதிபதியாக இவர் விளங்குகிறார். இசையோ, ஓவியமோ, காவியமோ இயற்ற விரும்புவர்கள் இத்தல நாதரை மனதார வணங்கினால் அவர்களுக்கு கலை ஞானம் கண்டிப்பாக கிடைக்கும் என்கின்றனர்,

நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்க மக்கள் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்