திருவிழிமிழலை விழிநாதர் திருக்கோவில்

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் – பூந்தோட்டம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள திருவிழிமிழலை எனுமூரில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

1000 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம். சங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் (தற்போது, நீடாமங்கலம் ) தலைநகராகக் கொண்டு எவ்விஎன்னும் வள்ளல் ஆண்டுவந்தான். இதுவே திருவிழிமழலையாகும்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார்/மாங்குடிகிழார்.

தலசிறப்புகள்:

மூலவர்: விழிநாதேசுவரர், விழியழகர், நேத்திரார்ப்பணேசுவரர்.
உற்சவர்: கல்யாணசுந்தரர். தாயார்: சுந்தரகுசாம்பிகை.
தலவிருட்சம்: வீழிச்செடி.
தீர்த்தமாக வீஷ்ணுதீர்த்தம் (முதலான 25 தீர்த்தங்கள்) உள்ளது.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற தலம், மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனுவால் பூசிக்கப்பட்ட தலம். இத்தலத்தில் திருமால் சக்கரம் வேண்டிப் பூசிக்கும் போது ஒரு மலர் குறையத்தன் கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்து சக்கரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை, சம்பந்தருக்கும் அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம். அப்பரும், சுந்தரரும் இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோவில் உள்ளது. பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி மிழலை நாட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர்.

குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். 

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோவில்/ ஆத்மநாதசுவாமி கோவில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.

திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோவில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும். கார்த்தியாயன முனிவர். தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.

முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனைத் திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்கும்படி வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்திலிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழுக் கோவிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்