முல்லைத்தீவில் வெற்றிகரமாக மஞ்சள் செய்கை வயல் விழா

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் 2025ஆம் ஆண்டிற்கான மஞ்சள் செய்கை திட்டம் முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு விவசாயப் போதனாசிரியர் பிரிவின் தொட்டியடி கிராமத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குணரத்தினம் எனும் முன்னோடி விவசாயிக்கு வழங்கப்பட்ட இத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் செய்கை சிறப்பாக விளைச்சல் அளித்ததை முன்னிட்டு, ‘உலர் வலயத்தில் வெற்றிகரமான மஞ்சள் செய்கை’ என்ற தலைப்பில் மஞ்சள் அறுவடை விழா 07.04.2026 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வு விசுவமடு விவசாயப் போதனாசிரியர் பிரிவில், விவசாயப் போதனாசிரியர் செல்வி யோ.அபிஷாயினி தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் திருமதி ஆ.லக்சன், பாடவிதான உத்தியோகத்தர்கள் மரக்கறி மற்றும் பழப்பயிர் பிரிவைச் சேர்ந்த திருமதி க.கேமா, உப உணவு பயிர்செய்கை பிரிவைச் சேர்ந்த திருமதி கு. சிவகௌரி, மந்துவில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் பு. பிரசாந்தன் உள்ளிட்ட அதிகாரிகளும் மேலும் கமக்கார அமைப்பினர் மற்றும் பல முன்னோடி விவசாயிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இச்செய்கை 0.25 ஏக்கர் பரப்பளவில் உயர் பாத்தி முறையில் அமைக்கப்பட்டிருந்தது. விவசாயி மேலதிகமாக மேலும் 0.25 ஏக்கரில் மஞ்சள் பயிரிடல் மேற்கொண்டிருந்தார். உள்ளூர் வகை மஞ்சள் இனம் பயிரிடப்பட்டிருந்தது.

மேலும், இந்த விவசாயி கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து மஞ்சள் செய்கையில் ஈடுபட்டு வருகின்றமையுடன், மஞ்சளைப் பதப்படுத்தி மஞ்சள் மா தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.