

அமைவிடம்:
திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து இருந்து மேற்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும். மயிலாடுதுறையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து இருபது கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து இருபது கி.மீ தொலைவிலும், நன்னிலத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிலும் உள்ள திருப்புகலூரில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
அசுரர்கள் தேவர்களையும் முனிவர்களையும் பயமுறுத்தியபோது, அவர்கள் வர்த்தமானீசுவரர் கோவிலில் தஞ்சம் புகுந்ததால் இந்த இடம் ‘புகலூர்’ என்று அழைக்கப்பட்டது. வருணன், வாயு, அக்னி மூவருக்கும் ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் சேர்ந்து அக்னியை, சக்தியில்லாமல் போகும்படி செய்தனர். அக்னி சக்தி இழந்ததால், தேவலோகம், பூலோகத்தில் மகரிசிகளால் யாகம் நடத்த முடியவில்லை. அக்னி தனக்கு மீண்டும் சக்தி வேண்டி சிவனை வேண்டினான். பூலோகத்தில் தன்னை வழிபட மீண்டும் சக்தி கிடைக்கும் என்றார் சிவன். இங்கு வழிபட்ட அக்னிக்கு சிவன், சக்தி தந்து இரண்டு முகம், ஏழு கைகள், ஏழு சுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் கொண்ட உருவத்தையும் கொடுத்தார். அவர் வழிபட்ட சிவன் இத்தலத்தில் அக்னீசுவரராகவும், வர்த்தமானீசுவரராகவும் எழுந்தருளியுள்ளார்.
தலசிறப்புகள்:
மூலவர்: வர்த்தமானேசுவரர், நிகழ்கால நாதர்
அம்பாள்: மனோன்மணி அம்மை.
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
தல விருட்சம்: புன்னாக மரம்.
அக்னி பகவான், பரத்வாசர், மன்னன் நளன், பதினெட்டு சித்தர்கள், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
வர்த்தமானீசுவரர் கோவில் அக்னீஸ்வரர் மூலவராக அமைந்த திருப்புகலூர் கோவிலின் வளாகத்திற்குள் அமைந்துள்ளது. புன்னகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம் என்பன இத்தலத்தின் வரலாற்றுப் பெயர்கள். முருக நாயனார் பிறந்த ஊர் இது. முருகநாயனார் இக்கோவிலில் தினமும் மும்முறை பூக்களைச் சமர்ப்பித்து சேவை செய்தார். திருஞான சம்பந்தர் முருக நாயனாரின் சேவையைப் போற்றிப் பாடினார். தேவார மூவர்கள் இங்கு ஒன்பது பதிகங்கள் பாடினர். அவற்றில் எட்டு திருப்புகலூர் பற்றியவை. ஒன்று இந்தக் கோவிலைப் பற்றியது.
இக்கோவிலின் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
தலவிநாயகரின் பெயர் வாதாபி கணபதி.
திருநாவுக்கரசர்(அப்பர்) முக்தி அடைந்து தனது கடைசி பதிகம் இங்கு பாடினார்.
இங்கு பூதேசுவரர், வர்தமானீசுவரர்பவிஷ்யேசுவரர் ஆகிய மூன்று சிவலிங்கங்கள் உள்ளன. இந்த மூன்று லிங்கங்களும் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது. வர்தமானேசுவரரின் இன்னொரு பெயர் ‘நிகழ்கால நாதர்’. வர்த்தமானீசுவரை வழிபடுவதன் மூலம், தங்கள் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நிகழ்கால நாதரை வழிபட்டால், செல்வம், ஆரோக்கியம், ஞானம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவை கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோவிலுக்குச் செல்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இங்கு நவக்கிரகங்கள் ‘ட’ வடிவில் உள்ளன.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்