திருப்பாம்புரம் சேடபுரீஸ்வரர் திருக்கோவில்

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இருநது தெற்கே 2 கி.மீ. தொலைவிலுமுள்ள திருப்பாம்புரம் எனுமூரில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது.

திருக்கைலாயத்தில் ஒருமுறை விநாயகர். சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார் இறைவன். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேடனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேசபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேடன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேசுவரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேசுவரம். மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர். ஆதிசேடனுடைய மூலவிக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் கோவிலில் உள்ளன. சோழர்களால் கட்டப்பட்டது இத்தலம்.

தலசிறப்புகள்:

மூலவர்:     சேடபுரீசுவரர், பாம்புரேசுவரர்
அம்மன்:     பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி
தலவிருட்சம்:   வன்னி

தீர்த்தமாக ஆதிசேட தீர்த்தமுள்ளது.

திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புர நன்னகர்” என்றும். இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூசை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

சர்ப்பங்கள் தாங்கள் பாவ விமோசனம் பெறும் பொருட்டு, ஆல மர விழுதை நாராகக் கிழித்து, அகத்திப் பூ மாலை தொடுத்து இறைவனுக்குச் சாற்றி சிவனருள் பெற்ற தலம்.

அகத்தி பூப்பதில்லை எனும் நம்பிகை மொழிகள் வழக்கிலுள்ள தலம்
இன்று வரை இத்தலத்தில் எவரையும் பாம்புகள் தீண்டியதில்லை; இங்கே ஆலம் விழுதுகள் தரையைத் தொடுவது இல்லை;  மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராட்ச மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீசுவரர் சந்நிதியும் மிகவும் விசேடமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும்.

இத்தலத்தில் ராகுவும் கேதுவும் தனித்தனி சிலைகளாக இல்லாமல், ஒரே உடலாக பாம்பின் வடிவில் சிவனை நெஞ்சில் இருத்தி வழிபடுகின்றனர். நாக தோசங்கள் (ராகு-கேது தோசம்), காளசர்ப்ப தோசம், மற்றும் திருமணத் தடைகள் நீங்க இங்கு வந்து வழிபாடுகள் செய்கின்றனர். பாம்பின் கடியால் இறந்தவர் உயிர்பெற்று எழுந்த தலமாகவும் புராணங்கள் கூறுகின்றன.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்