

அமைவிடம்:
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில், திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையிலுள்ள தலையாலங்காடு எனுமூரில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் வேள்வி செய்து ஏவி விட்ட முயலகன் என்னும் கொடிய அரக்கனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடி அவன் முதுகை நெரித்த நிகழ்வு நடந்தது இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை. எனவே, நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நடராஜர் சிலையில் ஐயனின் திருப்பாதங்களில் கீழ் முயலகன் இருப்பதை காணலாம்.
தலசிறப்புகள்:
மூலவர்: நர்த்தனபுரீஸ்வரர், நடனேசுவரர் ஆடவல்லநாதர்
தாயார்: உமாதேவி, திருமடந்தையம்மை.
தலவிருட்சம்: ஆலமரம்.
தீர்த்தமாக சங்கு தீர்த்தமுள்ளது. அப்பரால் பாடல்பெற்ற திருத்தலம். கபில முனிவர், தாருகாவன முனிவர்கள், காளி, சனி.ஆகியோரால் வழிபடப்பட்டவர்.
கபில முனிவர் பூசித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியை பெற்றார். சரஸ்வதி தேவி பூசித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றார்.
அம்பாள் சன்னதியில் சனி பகவான் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது திருநள்ளாருக்கு அடுத்து இங்குதான். சங்க காலத்தில் பாண்டிய நெடுஞ்செழியன் இவ்வூரில் போர் புரிந்து வென்றதால் தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என பெயர் பெற்றார். அப்பருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்த திருத்தலம்.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்