கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரூபா100,000/= அபராதம் விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் 1.7.2026 அன்று உத்தரவிட்டுள்ளது.

அபராதம்

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 2 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசி பொதியை அரசாங்கம் நிர்ணயித்திருந்த கிலோ ஒன்றிற்கான ரூபா 255/= கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு ரூபா 100,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.