

அமைவிடம்:
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் கோவிலின் தேர் நிலைக்கு அருகில், கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
2000 வருடங்கள் பழமையான இக்கோவில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது.
பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார்.
அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும், என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்ற தலம்.
தலசிறப்புகள்:
மூலவர்: தூவாய்நாதர்
உற்சவர்: சத்தியவாகீசுவரர், தாயார்: பஞ்சின் மென்னடியாள்தலவிருட்சம்: பலா, தீர்த்தமாக ஆகாச தீர்த்தமுள்ளது.
சுந்தரரால் பாடல்பெற்ற திருத்தலம்.
இங்குள்ள அனைத்து விக்கிரகங்களும் விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது என்பர். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சனிபகவான் தெற்கு பார்த்து அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிசேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள்.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்