கொழும்பு, பெப். 10 நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும்
100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு மாத்திரமன்றி சந்தையில் கீரிச் சம்பாவுக்கு 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அது 340 ரூபாய் வரை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றது. கோழி இறைச்சி, தேங்காய் எண்ணெய் மற்றும் மீன் வகைகளின் விலைகளும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்ந்துள்ளன.
