மாங்குளம் பிரதேசத்தில் உள்ள, ‘கோடாலிபறிச்சான்’ கல்வெட்டு தரும் புதிய தகவல்!

மாங்குளம் பிரதேசத்தில் உள்ள, ‘கோடாலிபறிச்சான்’ கல்வெட்டு தரும் புதிய தகவல்!

வரலாற்று பேராசிரியர் ப. புஷ்பரட்ணமும் அவருக்குத் துணைநிற்கும் ஆர்வலர் குழுவும் களஆய்வு!

இற்றைக்கு 900 ஆண்டுகளுக்கு முன்னர், வன்னியில் ஓர் இடத்தில் மூவேந்தவேளான்”
என்ற விருதைப் பெற்ற படைத்தலைவன் ஒருவனும் அவனுடைய வேளைக்காரப் படையினரும், தங்கள் சேவைக்காக மன்னன் வழங்கியிருந்த நிலத்தில் கோவில் ஒன்றைச் சூழ அம்பலம், கிணறு, கேணி ஆகியவற்றை அமைத்தனர். அந்த நிகழ்ச்சியைப் பிரகடனப்படுத்தும் வகையில் அவர்கள், தூண் ஒன்றின் நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு ஒன்றைப் பொறித்துவைத்தனர்.
காலப்போக்கில், கோவிலும் கிணறும் அம்பலமும் கைவிடப்பட்டுக் காடு படர்ந்தது. கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன. கல்வெட்டும் பல இடங்களில் சிதைவுற்றது. கோவிலின் கதையும் கட்டியவர்கள் செயல்களும் மறக்கப்பட்ட வரலாறாகியது. மறைந்த வரலாற்றை மீட்பதற்கு ஆர்வம் கொண்டோர் முயன்றதால் கட்டட இடிபாடுகளும் கல்வெட்டும் சில மாதங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டன.

கல்வெட்டு

பேராசிரியர் ப. புஷ்பரட்ணமும் அவருக்குத் துணைநிற்கும் ஆர்வலர்குழுவும் கல்வெட்டு இருக்கும் இடத்துக்குச் சென்று, ஆய்வு செய்தனர்.கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட
காலத்தில் இந்த இடம் என்ன பெயரைப் பெற்றிருந்ததோ தெரியவில்லை. இன்று அது ‘கோடாலிபறிச்சான்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது.இந்த இடம், வவுனியா மாவட்டத்தில் மாங்குளம் பிரதேசத்தில் உள்ளது.

ஜெயபாகு தேவர்

கல்வெட்டின் காலம் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. அது, ஜெயபாகுதேவருடைய பன்னிரண்டாவது (ஆட்சி) ஆண்டு. இம்மன்னன் பொலன்னறுவையில் 1110/11 இல் அரச பதவி பெற்றவன். ஆகவே, இக் கல்வெட்டு 1122 இன் இறுதியில் அல்லது 1123 இன் முற்பாதியில்பொறிக்கப்பட்டது.
ஜெயபாகுதேவருடைய ஆட்சியாண்டைக் குறிப்பிடும் வேறும் பல தமிழ்க் கல்வெட்டுகள் இலங்கையில் கிடைத்துள்ளன.

வேளைக்காறர்

கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதன் நோக்கம் இதுதான். ஒரு வேளைக்காறப் படையைச் சேர்ந்தோர் தங்களுக்கு ஜீவிதமாகக் கிடைத்த நிலத்தில், ஒரு கோவிலின் தேவைகளுக்காக அம்பலமும் கிணறும் கேணியும் அமைத்தனர். இதைக் கல்லில் எழுதிப் பதிவுசெய்தனர்.

யார் இந்த வேளைக்காறர்?

சோழர் ஆட்சிக் காலத்தில் மன்னர்களுக்குப் பாதுகாப்பளித்தும் போர்களில் பங்குகொண்டும் பெரிதும் உதவிய ஒரு படைப் பிரிவினர் இந்த வேளைக்காறர் ஆவர். ‘ஆபத்து வேளையில் உதவுவோர்’ என்ற காரணத்தால், அவர்கள் ‘வேளைக்காறர்’ என்ற பெயரைப் பெற்றனர் என்பது, சில வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்தாகும்.

இலங்கையில் பல மன்னர்களுக்கு மிகவும் நம்பகமான படையினராக வேளைக்காறர் பணிபுரிந்தனர். அவர்களுடைய கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமானது, பொலன்னறுவையில் உள்ள ஒரு முதலாம் விஜயபாகு 1110/11 இல்இறந்தபோது, உருவாகிய குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பௌத்த சங்கத்தின் பிரமுகர்களுள் ஒருவரான ராஜகுருவும் அமைச்சர்களும் கூடி, தளதாய்ப் பெரும்பள்ளியையும் (அன்றைய தளதா மாளிகை) அதன் சொத்துகளையும் ‘உங்கள் ரக்க்ஷையாக வேண்டும்’ (அதாவது, ‘உங்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டும்’) என்று வேளைக்காறப் படையினரிடம் ஒப்படைத்தனர். இப்பொறுப்பை ஏற்ற வேளைக்காறர், “தளதாய்ப் பெரும்பள்ளியையும் அதன் சொத்துகளையும் பரிவாரத்தாரையும் பட்டும் கெட்டும் காக்கக் கடவோமாக’ என்று சபதம் செய்து, இதைச் ‘செம்பிலும் கல்லிலும் வெட்டுவித்துக் குடுத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். கல்லில் வெட்டியது கிடைத்துள்ளது; செப்பேடு கிடைக்கவில்லை.

மூவேந்தவேளான்

கோடாலிபறிச்சான் கல்வெட்டில் வேளைக்காறர் தலைவனாகக் காணப்படுபவன் மூவேந்தவேளான்.இப்பெயர், உண்மையில் ஒரு விருது. பெருந்தொகையான
நிர்வாகத் தலைவர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் சோழ மன்னர் இவ்விருதைக் கொடுத்தனர்.
தமிழ் நாட்டை முற்காலத்தில்ஆண்ட மூவேந்தர் (சோழ – சேர – பாண்டியர்
பிற்கால மன்னர் மனதைக் கவர்ந்தனர் போலும். சோழருக்கு முன்னர்
எட்டாம் நூற்றாண்டில் பாண்டியரும் இதை ஒத்த ஒரு விருதான, மூவேந்த மங்கலத்துப் பேரரையன்’ என்ற விருதை வழங்கியிருந்தனர்.
இலங்கையில் சோழர் ஆட்சி தொடங்கியபோதே. ஒரு மூவேந்தவேனான்’ வந்திருந்தான். அவன், ராஜேந்திர சோழன் நடத்திய படையெடுப்புக்குத் தலைமை தாங்கிய ‘ஐயங்கொண்ட சோழ மூவேந்தவேளான்’ ஆவான்.
இவன், படையெடுப்புக் காலத்தில் இருந்து, நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வருபவன் கோடாலிபறிச்சான் கல்வெட்டில் வரும் மூவேந்தவேளான். ஆகவே, இவன் இலங்கையில் சோழர் ஆண்டகாலத்தைச் சேர்ந்தவன் அல்லன். எனினும், சோழ மன்னன் ஒருவனிடம் இருந்து, “மூவேந்தவேளான்’ என்ற விருதைப் பெற்று வந்தவன் எனலாம்.ஏனெனில், இலங்கை மன்னன் ஒருவன், இந்த விருதைக் கொடுத்திருக்க முடியாது. அப்படியானால் இந்த மூவேந்தவேளான்’ யார்? இவன் எப்படி வேளைக்காறப் படையுடன் இலங்கைக்கு வந்தான்? இவை போன்ற பல வினாக்களைக் கோடாலிபறிச்சான் கல்வெட்டு எழுப்புகின்றது.
பொலன்னறுவையில் விஜயபாகு இறந்தபோது அவனுடைய தம்பி ஐயபாகு மன்னனாக, விஜயபாகுவின் மகன் விக்கிரமபாகு அவனை எதிர்த்துப் போர்தொடுத்தான்.
அந்தநேரத்தில், ஐயபாகு சோழ நாட்டில் இருந்து, வேளைக்காறப் படை ஒன்றின் உதவியைப் பெற்றிருக்கலாம். அக்காலச் சோழ மன்னனாகிய குலோத்துங்கன், இந்த உதவியை வழங்கி இருக்கலாம். பொலன்னறுவை விஜயபாகுவும் சோழ குலோத்துங்கனும் பகைவர்களாக இருக்கவில்லையா என்ற கேள்வி, சிலர் மனதில் எழலாம். விஜயபாகுவின்ஆட்சியின் தொடக்கத்தில், அது உண்மைதான். இன்று போல் அன்றும், அரசியல் பகைமை என்பது நிரந்தரமானது அல்ல.

இலங்கையில் குலோத்துங்க சோழன் மகள்

கோடாலிபறிச்சான் கல்வெட்டின் காலத்துக்குச் சில ஆண்டுகள் முன்பாகக்
குலோத்துங்க சோழன் மகள் ஒருவர், ‘சுத்தமல்லியாழ்வார்’ என்பவர், இலங்கைக்க வந்து ஓர் இளவரசனை மணம் முடித்து, இலங்கையில் குடியேறினார்.
இச்செய்தி, குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. இவ்விடத்தில் இருந்த விக்கிரம சலாமேக ஈஸ்வரம்’ என்ற சிவன் கோவிலுக்குச் சுத்தமல்லியாழ்வார் சில கொடைகளை வழங்கியிருந்தார். அவர் கல்வெட்டில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டில் இவர் பின்வருமாறுஅறிமுகமாகிறார்: “பாண்டியனார் வீரப்பெருமாள் தம்பிராட்டியார் கொலோத்துங்க சோழதேவர் திருமகனார் சுத்தமல்லியாழ்வார்.
‘வீரப்பெருமாள்” என்ற இளவரசன், ‘வீரபாகு’ என்றும் ‘மானாபரண தேவர்” என்றும் வேறு ஆவணங்களில் பெயர்பெறுவார். இவர் விஜயபாகுவின் சகோதரியின் மகள். தந்தை ஒரு பாண்டிய இளவரசன். இதனால் இவர் ‘பாண்டியனார் என்று அழைக்கப்பட்டுள்ளார்.
இவற்றால் நாம் அறிவது: விஜயபாகுவின் தங்கை ஒரு பாண்டிய இளவரசனை மணம் செய்தார். விஜயபாகுவின் மருமகன், சோழப் பேரரசனின் மகளை மணம் செய்தார். குலோத்துங்க சோழனின் இன்னொரு மகள் அம்மங்கையாழ்வார். அவரும் தமிழ்நாட்டில் இருக்காது கர்நாடகத்துக்குச்சென்றார்.

வன்னி சிற்றரசுகள்

மூவேந்த வேளான் போன்று வள்ளி பிரதேசத்தில், தங்கள் படைகளுடன் சென்று குடியேறியவர்கள், காலப்போக்கில் குறுநிலத் தலைவர்களாக மாறி, பிள்ளர் நாம் அறியும் வன்னி அரசுகளின் எழுச்சிக்கு வழிவகுத்தனர் என்று கொள்ள இடமுண்டு.

வரலாறு கற்பிக்கும் பாடங்கள்

மூவேந்த வேளானும் சுத்தமல்லியாழ்வாரும் போன்ற பல பிரமுகர்கள், காலத்துக்குக் காலம் தமிழ்நாட்டில் இருந்து வந்து, இலங்கையில் குடியேறினர். அவர்களின் பிற்சந்ததியார் நாட்டைவிட்டு வேறெங்கும் செல்லவில்லை. சுத்தமல்லியாழ்வாரின் வழித்தோன்றல்கள் உண்மையில் ராஜராஜசோழனின் வழித்தோன்றல்களே! ஏனெனில் குலோத்துங்க சோழனின் தந்தை ராஜராஜசோழனின் பேரன், தாயார் ராஜராஜ சோழனின் பேர்த்தி!
இலங்கையில், இவ்வழித்தோன்றல்கள் இன்று எங்கே? நான் வேறு, நீ வேறு என்ற கோஷம் ஒலிக்கும் இன்றைய அடிபிடி அரசியலில், இவர்கள் எந்தப் பக்கம்? இதுதான் வரலாறு. வரலாற்றை வரலாறாகக் கற்பவர்களுக்கு இது தன்கு தெரிந்த -விசயமே!

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *