யாழ்ப்பாணம், டிசெ. 27 சுனாமி பேரழிவின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், ஆகியோர்
மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.




பின்னர் தேசிய கொடியை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றியதை தொடர்ந்து, பொது ஈகச்சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்படவர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தலில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் என பல நூற்றுக்கணக்கானோர்
கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.