Visits of Current Page:1119
GlobalTotal: 306506
என்னைப்போல் தானே
நீங்களும்
வீடுதாண்டி
வெளியேறுவதையே
விடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்
எல்லா வீடும் ஒன்றுபோலில்லை
ஒரு வீடு சிறகுகள்
தருகிறது
ஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறது
ஒரு வீடு சிறைக்
கூடமாகிறது
என்னைப்போல் தானே
நீங்களும்
வீட்டுக்கு
வெளியேதான்
வாழ்வென்று ஒன்றிருப்பதாய்
நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்
அவரவர்க்கும்
உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்
அது
உட்புறமாய்
தாழிடப்பட்டிருப்பதும்
மறந்து வீணே
வாசற்படிகளில் நின்று தேம்பிக்கொண்டிருக்கிறோம்
இனி
திறக்க வேண்டியதும் மறுத்தால்
உடைத்துக்கொண்டு
வெளியேற வேண்டியதும்
தத்தமது இதயத்தின்
கதவுகளைத்தானே
தவிர
வீட்டின் கதவுகளை
அல்ல
—ரிஸ்கா முக்தார்—