பிரான்சில் தொன்மையான மரக் காற்றாலை /ஈழத்தில் சூத்திரக் கிணறு

பிரான்சு வாழ் புலம்பெயர் ஓவியர் VP வாசுகன்

இலங்கையில் பிறந்த வாசுகன் பிரான்சு வாழ் புலம்பெயர் அடுத்த தலைமுறைத் தமிழர். இவர் தொடர்ந்து இயங்கும் ஓர் ஓவியர். தனது ஓவியக்கண்காட்சிகளை பிரான்சு, சைப்பிரஸ், ஜப்பான் எனப்பல்வேறு நாடுகளில் நடாத்தி வருபவர். தவிர ஆசிய, ஐரோப்பா, வட அமெரிக்கா என இரசனைத்தேடல் சுற்றுலா செய்து வருபவர். அழகியல் தேடலுடன் உலாவும்  இளைய  தலைமுறையினரது நாட்காட்டிப் பதிவுகளில் ஒன்றுதான் இந்த ஆக்கம்

ஐரோப்பியத் தலைநகரங்கள் எப்போதும் கட்டிடக் காடுகள்தான்.  பிரமாண்டமான கண்ணாடிச் சுவர்கள் தூசிதுணுக்குகள் நிறைந்தவைதான்… பிரான்சுத் தலைநகரமான பாரிஸ் தவிர்ந்த ஏனைய நகரங்கள், கிராமங்களுக்கு செல்லும்பொழுது தென்படும் மருத நிலங்களும், முல்லை நிலங்களும், குறுஞ்சி நிலங்களும் தரும் செழுமையான காட்சிகள் – இன்னும்  எமக்கான இயற்கை இப்பூமியில் எஞ்சியுள்ளதுதென எண்ணி மனம் ஆறுதல் கொள்ள வைக்கிறது. மறுபுறம் அதையும் மீறி எஞ்சியுள்ள வளமான நிலங்கள், இன்னும் எவ்வளவு காலங்களுக்கு தொடரப் போகிறது என எண்ணி மனம் பதட்டமடையவும் வைக்கிறது. 

Troyes

பாரிஸில் இருந்து தென்கிழக்கே 200 கி.மீ. தொலைவில் உள்ளது  “த்றுவா” (Troyes) எனும் இடம். பிரான்சில் காற்றினால் இயங்கும் நவீன ஆலைகள் அதிகம் காணப்படும் விவசாய நகரமாகத்  இது திகழ்கிறது. மண்ணின் வளம், காற்றின் சுத்தம், மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள், விவசாயிகளின் ஊக்கம் – ஒரு செழிப்பான மண்ணிற்கே உரிய அம்சங்களை கொண்டுள்ள நகராக இது இன்றும் இயங்குகிறது. பல  நூற்றாண்டுகளாக விவசாய வளர்ச்சி, அதன் நீட்சியாக வர்த்தக வளர்ச்சி, அதன் பெறுபேறாக  பக்கத்து  நகரங்களின் வருகை அண்டை நாடுகளின் வருகை பண்டமாற்று என ஆண்டாண்டு காலமாக செழித்து வளர்ந்த தனித்துவத்துடன் நிற்கிறது  “த்றுவா” நகரம்.
நகர வரலாற்றை முன்னிறுத்தி  அனிமேஷன் – விவரணப்படம், தொல்பொருள் ஆராய்ச்சியில்    கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொருட்களையும் மற்றும் அங்கு வாழ்ந்த மிருகங்கள்,  மனிதர்களின் எலும்புக்கூடுகளையும், புகைப்படங்களையும், சில ஓவியங்களையும்  நாகரீக வரலாற்றுக் கதையினை அங்கிருந்த  அருங்காட்சியகம் எமக்கு  கூறுகிறது. மனித நாகரிகத்தின் படிமங்களை சேகரிப்பது, பாதுகாப்பது அடுத்த சந்ததியினருக்கு கையளிப்பது பிரான்சில் பழக்கத்தில் உள்ள  பெறுமதியான நடைமுறையாகும்.  
இந்த அருங்காட்சியகத்திலிருந்து வெளிவரும் பொழுது இயற்கைச் சூழல் பாதுகாத்தல், கற்பிணித்தாய்மார்,  கருவுறும் சிசுக்கள் தொடர்பான ஊட்டச் சத்துள்ள உணவுகளின் முக்கியத்துவம், விவசாயம், சுத்தமான நீர்,  காற்று, உலகமயமாதல், கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகை, அகதிகளின்  வாழ்வியல், சுதந்திரமான  உரையாடல் பிரான்சில் நடைபெறும் மஞ்சள் சட்டைப் போராட்டம், போன்றன மனதில் ஒருநொடி நிழலாடி மானிட வாழ்வியலின் இருத்தலை  ஞாபகமூட்டின. 

தனித்துவ அழகியல்களைப் பிரதிபலிக்கும் 16ம்  நூற்றாண்டுத் தேவாலயங்கள், மண்ணும் மரமுமாகக்கட்டப்பட்ட கட்டிடக் கலை, கண்ணாடி  ஓவியச்சிற்பக்கலைகள், தொல்பொருள் அருங்காட்சியங்க, ஓவியக் காட்சியகங்கள், காட்டு மிருகங்கள் வாழும் பாதுகாப்பு வனம், தேனீ வளர்க்கும் தோட்டங்கள், அழகான ஏரி – படகுப் பயணங்கள்,

Moulin-à-Vent AOC - Wikipedia
Moulin-à-Vent

அத்தோடு பழைமைத் தொழில்நுட்பத்தினாலான நகரும் மரக்காற்றாலை (Le Moulin-à-Vent) எனக் காணக் கிடைத்தது. இவற்றை முறையாகப்பட்டியலிட்ட சுற்றுலாத் துண்டறிக்கை வழியில் தொடராகப்  பார்வையிட்டபடி  நாட்கள் கடந்தன. 
கடைசி நாளன்று நகரும் மரக்காற்றாலையை பார்க்கும் ஆர்வத்துடன் மதிய  உணவருந்தி பயணத்தைத் தொடர்ந்தேன். மாலை நேரச் சூரியன் வானை மஞ்சள் பூசிக்கொண்டிருந்தான். சாம்பலும் தங்க நிறமும் கலந்த துணுக்குகளாக அந்த  வளமான  தோட்ட மண்ணை மினுமினுங்க வைக்கும் காட்சி வான்கோவின் ஓவியங்களை நினைவில் நிழலாட வைத்தது. சூரியக் கதிர்களும் – இறுங்குக் கதிர்களும் ஓவியர் வான்கோவின் பாடுபொருட்கள். எனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வளமான மினுங்கும் தோட்ட மண்ணைத் தொட்டு விரல்களால் வருடுகிறேன். அந்த மண்ணில் ஒரு பிடியை எடுத்து பத்திரமாக எனது பையில் சேகரித்தேன். அந்த மருத மண்ணிற்கே உரித்தான மண்வாசம் காற்றில் மிதந்தது. எனது மனம் நான் பிறந்த மருதநில மண்ணின் நினைவுகளை ஒருநிமிடம் அசைபோட்டது. 

நகரும் மரக் காற்றாலையை (Le Moulin de Dosches) அண்மிக்கும் வேளையில் எனது மோட்டார் வாகனத்தை கொஞ்சம் தொலைவிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று.  இந்த முறைமை அவ்விடத்தின் சூழலைப்பாதுக்கும் நோக்கில்  ஏற்பட்டுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. மீதி தூரத்தை மரங்களும் புற்களும் நிறைந்த  பாதையில் நடந்து செல்கையில் இருமருங்கிலும் நின்ற மரங்களை நோக்க முடிந்தது. இந்த மரங்களின்  அருகில் இருந்த பெயர்பலகையில் எழுதப்பட்டிருந்த மரங்களின் பெயரை வாசித்த  வண்ணம் நடந்தேன்.  
பல நூறு வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட விசை ஆலைகள் – காற்றினாலும், மனிதவலுவினாலும்,    விலங்குகளினாலும்,  நீரோட்ட விசையினாலும்  இயங்கின. இவற்றில்  காற்றினால் இயங்கும் ஆலைகள் மேற்கு நாடுகளில் பிரசித்தி பெற்றவை. வட்ட வடிவமான சுவரை எழுப்பி அதன் உச்சியில் மரத்தினாலான அல்லது பிரம்பினாலான  மூன்று அல்லது நான்கு அல்லது ஆறு  இறக்கைகளைக் கொண்ட விசிறிகளின் சுழல் விசை மூலம் இயங்கும் காற்றாடி ஆலைகள் பழமையானவை. இன்று  அலுமீனியத்தால் ஆன மூன்று இறக்கைகள் கொண்ட விசிறிகள் மூலம்  இயங்கும் காற்றாடி ஆலைகள் புழக்கத்தில் வந்துவிட்டன. புதியவை பருமனில் பன்மடங்கு பெரியவை. இவை பழையவற்றிலும் பார்க்க மிக மிக உயரமானவையும்  கூட. உயரம் அதிகரிக்க காற்றின் விசையும் அதிகமாகும்.   பல்வேறு வடிவம் கொண்ட இவ்வகையான காற்றாடி ஆலைகள்  பலதரப்பட்ட மனித தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
நடந்து செல்கையில் சற்று தொலை தூரத்திலே  நகரும் மரக் காற்றாலை கம்பீரமாகத் தென்பட்டது. அதன் முழு உருவமும் மரத்தினால் ஆக்கப்பட்டு ஒட்டுமொத்த ஆலையும் நிலத்தில்  பிரத்தியேகமாகப் பூட்டப்பட்டிருந்த இன்னொரு பெரிய சக்கரத்தில் சுழலும் வண்ணம் பொறியியல் செயற்பாடுகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. 16வது நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட இவ்வாலை 28 தொன் எடையுடன் இன்றும் இயங்குகிறது. காற்று எத்திசையில் வீசினாலும் அதற்கேற்ப ஆலை இரு  மனித வலுக்கொண்டு திருப்ப முடியும். பிரான்சிலுள்ள நகரும் மரக் காற்றலைகளில் இது மிக  முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் உரிமையாளர் இந்த ஆலைக்கு அருகாமையில் பண்டைய பாண் வெதுப்பகமும், களஞ்சியமும், இறுங்கிலிருந்து பாண் எவ்வாறு  தயாரித்தார்கள் என்பதை விபரணப்படுத்தும் காட்சியரங்கமும் அமைத்துள்ளார். 

பாணின் சுயசரிதையை  அறிந்து நகருகையில் இதைச் சூழவுள்ள நிலத்தில் ஐரோப்பிய மற்றும்  மத்திய தரைக் கடலை அண்டிய மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு அதற்கான விபரங்கள் கொடுக்கபட்டிருந்தன. இதனைக் காண வரும் மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள், விவசாயிகள்  வெளிப்படுத்தும் உற்சாக உணர்வுகள் நாம் இதனைப்பார்க்கக் கொடுத்த நுழைவுச் சீட்டின் பெறுமதியை மீறியதாக உணர வைத்தது. அச்சூழலின்  காட்சிகளும், நறுமணமும் அமைதியும் என்னை மீண்டும்  ஒருநிமிடம் நான் பிறந்த இடமான இயற்கை மரங்களும், நெல்வயல்களும், மரக்கறித்தோட்டங்களும், கலைஞர்களும் வாழ்ந்த எனது பிறப்பிடமான அளவெட்டி கிராமத்திற்கு இழுத்து வாழ்வுச் சக்கரங்களை சுழற்றியது.  
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மனித நாகரீகத்தின் பொறியியல் வளர்ச்சி வேகம் கண்டது. ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சக்கரங்களின் சுழல் உத்தி முறை விவசாய தொழிலுக்காகவே அதிகம் பயன்பட்டது, அப்பாலும் நெசவு, மட்பாண்டத்தொழிலிலும் பயனளித்தது. நமது பயன்பாட்டிலும் பல கருவிகள் சுழல் உத்தியில் இயங்கின அவற்றில் செக்கு, சூத்திரக் கிணறு போன்றன மின்னல் கீற்றாக கண்ணுள்ளே ஒரு கணம் தோன்றுகிறது. இவை இரண்டையும் எனது பாலர் வயதுக்காலங்களில் கேட்டு, பார்த்து, தொட்டு உணர்ந்து கொண்டேன். 

குறிப்பாக எனது பாட்டனார் நீர் பாச்சுவதற்காக இயக்கிய இரு வாளிச் சூத்திரதில் நேரத்தை போக்கவே அதன் மேல் ஏறி புகையிரதவண்டியில் நீண்ட தூரம் பயணிப்பதாக எண்ணிப் பயணிக்கையில் சமநிலை தடுமாறி பின்னோக்கி விழுந்த அனுபவங்கள் நிறைய உண்டு.
உழுந்து, பயறு, அரிசி போன்றன தானியங்களை கையின் விசையினால் மாவாக்க  பயன்படும் கருவியே  திருகை என அழைத்தோம், அவையும் சுழல் உத்தியே. திருகையின் பருமனான தோற்றத்தை கொண்டு விலங்குகளின் விசை மூலம் இயங்குவதே செக்கு எனும் பருமனான இயந்திரம். இதன் பயன்பாட்டில் எள், தேங்காய், இலுப்பை என்பவற்றிருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்க பயன்படுத்தினர். எண்ணெய்யை  பிரித்தெடுத்து மீதி வரும் சக்கையின் பரிமாணம் புண்ணாக்கு, அரப்பு என பெயர் வைத்து நமது கிராமங்களில் பயன்பெற்றனர். 

சூத்திரக் கிணறு  இயந்திரம் – இரு வாளிச் சூத்திரம், பலவாளிச் சூத்திரம் எனும் வகைகளில் உண்டு. இரு வாளிச்சூத்திரம் சற்று சிக்கலான பொறியியல் முறை சார்ந்தது. நிலத்தில் பூட்டப்பட்டுள்ள நடு அச்சிலிருந்து நீளமான  இரும்பு கேடயத்தின் மறுபுறத்தில் புகையிரத வண்டியின் சக்கரத்தின் அளவில் இரண்டு இரும்பு சக்கரங்களை இரண்டு மாடுகள் பூட்டி இழுக்க அவை  சாதாரண கிணற்றிலும் மூன்று மடங்கு விட்டமுள்ள  இரும்புத் தண்டவாளத்தில் இரு சக்கரங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவரும். குறுக்குவாட்டிற்கு தொங்கும் இரும்புச்சங்கிலிகள் வேறுபல  இரும்புச்சக்கர உதவிகளுடன் கிணற்றினுள் இரு கம்பிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு மீற்றறிலும் உயரமான இரு இரும்புவாளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக நீர்ப்பாச்ச சாத்தியப்படும். 


உலகின் வெவ்வேறு நாடுகளின் அகழ்வாராய்ச்சியின் தகவல்கள் பொறியியல் வளர்ச்சியின் பல ஆதாரங்களை விளக்குகிறது. நமது பாவனைகளில் பல கருவிகள், உபகரணங்கள் பயன்பாட்டில் இருந்துஉலகமயமாதலின் போர்வைக்குள் அழிக்கப்படுகின்றன. இவ்வேளைகளில் எமது முன்னோரது நாகரீக வளர்ச்சியின் பாவிக்கப்பட்ட பொருட்களை சேகரித்துப்பாதுகாக்கும் அருங்காட்சியகம் ஈழத்திலும்,  தமிழகத்திலும் கிராம நகர அமைப்புகளில் அமைத்துப்பேணுவது அத்தியாவசியமானது.

காக்கைச் சிறகினிலே சஞ்சிகை 
இலக்கிய மாத இதழ் ஏப்ரல் 2019  V.P. வாசுகன்
.. www.vasuhan.com

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *