கித்தானில் கோடுகளின் கவிநய அசைவுகள்

ஜெயலட்சுமி சத்தியேந்திரா Jayalakshmi SATYENDRA (Sep 1936 – Nov 2012).

கோலம் போடுவதோடு  மட்டும் நின்றுவிடவில்லை தமிழ் பெண்கள். மாக்கோல கலையானது தமிழர்களது பாரம்பரிய கலைகளில் சிறப்பு பெற்றிருந்தது. மதம் சார் கொண்டாட்டங்கள், குடும்ப வைபவங்களில் வீடுகளை அலங்கரிக்கும் கலை வடிவமான மாக்கோலம் பெண்கள் மத்தியில் தனித்துவம் பெறுகிறது.  பாடிக்கொண்டே கோலம் போடப்பட்டது. தாளக்கட்டிற்க்கு  ஏற்ப புள்ளிகள் இடப்பட்டன, உடலசைவு நெளிவுகளும், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் பாதங்களும், குரலின் இனிமையும் என வீட்டு முற்றத்தில் ஓர் அரங்கியலே அரங்கேறும். ஐரோப்பிய கலைஞர்கள் சிலர் கோலங்களின் ஒழுக்கங்களை தென்னிந்தியா சென்று பல்கலைக்கழக மட்டத்தில் பட்டம் பெற்று வருகின்றனர். அவ்வாறு பட்டம் பெற்ற பிரெஞ்சு ஓவியையின் அறிமுகம் 2008 பரிசிலும், 2012ல் லண்டன் சென்றபோது இங்கிலாந்து ஓவியை ஒருவரின் கண்காட்சியை நேரில் பார்த்தும் வியந்து நின்றேன். ‘பாரிஸில்’ வீதியோர ஓவியர்களால் வரையப்படும் ஆன்மீக தன்மைகொண்ட  மண்டல (Mandala) பாணியில் வரையப்படும் ஓவியங்களும் கோலங்களின் பாதிப்பே.  மேற்கில் ஓவிய மறுமலர்ச்சிக் காலத்தில் பெண்  ஓவியர்கள் செழிப்புற முடியாத காலத்தை “மறுமலர்ச்சிக்காலம்” எனக் கூறலாமா. இக்காலத்திலேயே கித்தானில் (Canvas) ஓவியம் வரையும் முறையும், எண்ணெய் வர்ணமும் (oil colour) அறிமுகமாகியது. மறுமலர்ச்சிக்கால ஓவியர்களான லியனாடோ டாவின்சி, மைக்கலாஞ்சலோ, றபாயேல், பொட்டிச்செலி  போன்ற தலைசிறந்த ஓவியர்கள் எண்ணெய் வர்ணத்தில் ஓவியம் தீட்டுவதில் கைதேர்ந்திருந்தார்கள். புகைப்படக்கருவி அறிமுகமாகாத மறுமலர்ச்சி காலம், முக உருவச் சித்திரங்கள் (Portrait) வரைவதில்  ஓவியர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

ஜெயலட்சுமியின் பெரும்பான்மையான எண்ணெய்வர்ண முக உருவச் சித்திரங்கள் பயிற்சியையும் தேர்ச்சியையும் நேர்த்தியையும் பிரதிபலிக்கின்றன. ஜெயலட்சுமி தனது நாற்பதாவது வயதில் எண்ணெய்  வர்ணத்தில் வரைந்த சுய முக உருவச்சித்திரம் (Self Portrait 1976 oil on canvas 48 x 67cm)  நூலை மேலும் மெருகூட்டுகிறது. ஓவியை தனது பெற்றோர்களது முக உருவாசித்திரத்தையும் வரைந்துள்ளார். My Mother Chellammah Rajandram (oil on canvas 42 x 57cm) My Father Sinnathamby Rajandram ( oil on canvas 42 x 57cm.  
எண்ணெய் வர்ண ஓவியங்களை கித்தானில்  வரைவதற்காக விசேடமாக தயாரிக்கப்படும் சிறிய சாந்தேப்பை வடிவில் உள்ள “தட்டு கத்தி” (Palette Knife) – பயன்படுத்தி ஜெயலட்சுமி கீறிய ஓவியங்களை நேரில் பார்த்த சில ஆங்கில விமர்சகர்களின் கருத்து நூலில் வர்ணிக்கப்பட்டுகிறது. கித்தானில் வர்ண வளைவுகள், திட்டி யாகவும் அழுத்தமாகவும் செல்லும் கோடுகளின் தன்மை  கவிநயம் கொண்டவை. “பெரும்தீ” என்ற தலைப்பில் வரையப்பட்ட ஓவியம் (Conflagration – Oil on Canvas, 45 x 61 cm),  அதன் பாடுபொருள் ஓவியர் டேனரையும் (J. M. W. Turner 1775 – 1851), வர்ண அசைவுகள் ஓவியர் வான்கோவையும் (van gogh 1853 – 1890)  நினைவூட்டுகின்றன.1973ல் பரிசு பெற்ற ஓவியமான  தென்னந்தோப்பு (Coconut Palms) ஓவியம் எமது நிலத்தின் நினைவுகளோடான பாடுபொருள். ஜெயலட்சுமியின் இயற்கைக்காட்சி ஓவியங்களின் தலைப்புகள்  –  நிழல்கள், பச்சை  வயல், மார்கழி நிலவு, சுறுசுறுப்பான, மூன்று  நிர்வாணம், இலை அற்ற, நீல நீர், மார்கழி நிலவு, அருவி, நெல் வயல், காடு, செஞ்சிவப்பு வானம், தேயிலை தோட்டம், சூரிய அஸ்தமனம்.  

Rice Fieldsஓவியனாக நான் இந்நூலை ஒவ்வொரு கோணங்களிலும் அணுகினேன். இலங்கை தமிழ் ஓவிய வரலாற்றின் மிக முக்கிய பதிவேடாகவே கருதலாம். தமிழ் கலைஞர்களின் சுயசரிதை பதிவேடுகள் தொடர்ந்தும்  அச்சேற்றப்படுத்தல், அழிக்கப்படும் வரலாற்றின் எதிர்வினைக்குறியீடாகும். ஜெயலட்சுமியின் இவ்வோவிய தொகுப்பு நூலில் ஓவியங்களை கால வரையறை ஒழுங்கிலும், ஓவியம் வரையப்பட்ட திகதிகள் குறிப்பிடப்பட்டிருபின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இலங்கையின் மலைப் பிரதேசத்தில்  “பதுளை” க்கு  அருகாமையிலுள்ள ‘உலக முடிவு’ (worlds end) என்று குறிப்பிடப்படும் செங்குத்தான மலையின் காட்சி பயங்கரமானது. கொழும்பில் எனது பாடசாலை இறுதி காலப்பகுதியில் இவ்விடத்திற்கு நேரே சென்று பார்த்த ஞாபகமும் புகைப்படமும் எனது பொக்கிஷம். பாரிசில் 2004ம் ஆண்டு எனது தனிநபர் ஓவியக் கண்காட்சியில் ‘உலக முடிவு’ என்ற தலைப்பிலான மலை காட்சி ஓவியத்தை காட்சிப்படுத்தி இருந்தேன். அதே மலை காட்சியை அதே  தலைப்பில் ஜெயலட்சுமி வரைந்து தனது தனிநபர் ஓவியக் கண்காட்சி  1981 – மொஸ்கோவில் காட்சிப்படுத்தியிருக்கிறார். கொரோனா காலத்தில் “உலக முடிவு” என்ற சொல் ஒரு இறுக்கமான மனநிலையை தருகிறது. அதே ஆண்டு, 1981 ஆசியாவிலேயே பெரிய யாழ் நூலகம் தீக்கிரையானது. 19ம் நூற்றாண்டு ஓவியர்களான ஓவியர் வான்கோவும் ஓவியர் செசானும் ஒரே நிலக்காட்ச்சிகளை வேறுபட்ட பாணிகளில் வரைந்து மகிழ்ந்தார்கள்.  

Coconut Palms ( oil on canvas 62x48cm )ஓவியை ஜெயலட்சுமி பற்றி, சற்று அறிந்திருந்தாலும், இங்கிலாந்தில் வசித்து வரும் இலக்கிய ஆர்வலர் திரு. பத்மநாப அய்யர் மூலமாகவே விரிவாக அறிந்து கொண்டேன். அவரது குடும்பப் பின்னணி பற்றியும் இந்நூல் பற்றியும் விவரித்தார். இந்நூலை சில கிழமைகளில் தபாலில்  அனுப்பியும் வைத்தார். நூல் கையில் கிடைத்ததும் இந்த கோவிட் 19 – உள்ளிருப்பு காலத்திலும் என்னுள் ஓர் புத்துணர்ச்சியை ஏற்படுத்திற்று. ஓவிய விமர்சகர் இந்திரனும், பத்மநாப அய்யரும் இணைந்து “ஈழத்து தமிழ் ஓவியர்கள்” பற்றிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிடுவதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் முதிர்ந்த ஓவியரான ஆசை இராசையாவின் (1946) சுயசரிதை தாங்கிய ஓவிய நூல் ஒன்று சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது. பல விருதுகளையும் சாதனைகளையும் தாண்டி 50 வருட ஓவிய பயணத்தில், அவரது ஓவியங்கள் ஓவியகளஞ்சியங்களில் சேகரிக்கப்பட வேண்டும். மேலும் அவரது நூல் பற்றிய விமர்சனங்கள் பரவலாக எழுதப் படுதல் அவரது இறுதிக்காலத்தில் மனமகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சென்ற வருடம் Oct – Nov 2019 லண்டனில் உள்ள “விம்பம்” ஒழுங்கமைப்பு இலங்கையில் பல நகரங்களில் மிகப்பிரம்மாண்டமாக சிறுவர்களுக்கான ஓவியப் போட்டியை   நடத்தியிருந்தது. அதன் நினைவாக மறைந்த ஈழத்து ஓவியர் மாற்கு (1933.06.29 -2000.09.26)வின் நினைவு மலர் ஒன்றும் வெளியானது. அதில் அவரது மாணவர்கள், நண்பர்கள், ஓவியர்கள் தரமான கட்டுரைகள் எழுதி இருந்தனர். இவ்வாறாக ஈழத்து தமிழ் ஓவிய வரலாறுகள்  தொடர் ஆய்வு கட்டுரைகள் பிரசுரம் ஆவதோடு  மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் பட்டறைகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுதல் ஆரோக்கியமான ஓவியச்சூழலை வளர்த்தெடுக்கும். 

நிழல்கள் ( oil on canvas )1983 ல் இலங்கையில் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இன அழிப்பு இனக்கலவரம், ஜெயலட்சுமி குடும்பத்தினரை இங்கிலாந்தில் அகதிகள் ஆக்கியது. அதன் பாதிப்பு ஓவியங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. “காலச்சக்கரம்” – (oil on canvas 50 x 70 cm) – இன்னொரு பரிமாணம் – “எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்”. நிர்வாணமாக வரையப்பட்டுள்ள புதுமைப் பெண்களின் – பெண் உருவ ஓவியங்கள்,   பெண்களின் புரட்சியையும், சுதந்திரத்தையும் பறைசாற்றுகின்றன. “புதுமைப் பெண்” என்ற தலைப்பில் வரையப்பட்டுள்ள பெண்ணின் நிர்வாண உருவ ஓவியம், காலனித்துவ காலத்திற்குப் பிற்பட்ட இறுக்கமான சில விழுமியங்களை தகர்க்கின்றன. உள்ளிருப்பு காலத்தை முன்னிறுத்தி சென்ற மாதம் July 2020 “ஊடறு” ஊடகம் ‘ஜூம் செயலி’ (Zoom Talk) வழியாக “ஈழத்து பெண் ஓவியர்கள்” – உரையாடலை நிகழ்த்தியது. யாழ்பாணம், மலையகம், மட்டக்களப்பு, இங்கிலாந்து, பிரான்ஸ், போன்ற நாடுகளில் இருந்து பன்னிரெண்டு பெண் ஓவியர்கள் கலந்துகொண்டது மிகவும் ஆரோக்கியமானது.  ஜெயலட்சுமி ஈழத்து பெண் ஓவியர்களின் முன்னோடியாக கருதலாம். இந்தியாவில் நவீன ஓவியத்தின் முன்னோடியாக கருதப்படும் ஓவியர் எம். எப். உசேனின் ‘மதர் இந்தியா’ ஓவியம் ஒரு கசப்பான வரலாற்று பதிவு. ‘மதர் இந்தியா’ ஓவியம் இந்துத்துவவாதிகளின் சர்ச்சைக்கு உள்ளாக்கி, எம். எப். உசேன் இந்தியாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்.  இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த உலகறிந்த ஓவியர் உசேன், இறக்கும் வரை தனது தாய்நாட்டுக்கு திரும்பவில்லை. ஜெயலட்சுமியின் “தாயும் சேயும்” என்ற ஓவியம் தலைசிறந்த படைப்பு.  “தாயும் சேயும்” ஓவியம், 12ம் நூற்றாண்டுகளில் இருந்து இன்றுவரை பல ஓவியர்களால் வெவ்வேறு ஊடகங்களினால் படைக்கப்பட்ட வரும்  ஒரு ஓவியத்தொடர்.  ஜெயலட்சுமி கவிதை மேல் உள்ள ஈடுபாடு,  முகஉருவ ஓவியமாக வரைந்த புரட்சிக் கவிஞன் ‘சுப்ரமணிய பாரதி’ (oil on canvas 44 x 58 cm)  யின் ஓவியமும் சாட்சி. புத்தக தட்டில் புத்தகங்களுக்கு பின்னின்று தலைப்பாகையுடன் வீரியமாக பார்க்கும் பாரதியின் முகம், அவன் பின்னே சுதந்திரமாக பறக்கும் வெண் பறவைகளும் ஓவியத்தில் பாவிக்கப்பட்ட சூடான வர்ணங்களும் ஓவியத்தின் சிறப்பு. “…வாழ்க்கையையே கவிதையாக  செய்தோன், அவனே கவி” – பாரதி

Distant Dawnஎன்னை கிளர்ச்சிக்குள்ளாக்கிய ஓவியம் “நாங்கள்” (Oneness – oil on canvas 60 x 74cm). நீண்ட  ஒரு ஓவிய பயணத்தில் ஓவியையின்  இறுதிக் காலங்களில் பண்பியல் ஓவியப் (abstract painting) பாணியிலும் சில ஓவியங்களை வரைந்து இருப்பது சமகாலத்தை நிலைநிறுத்துகிறது. காதலின் உச்ச கட்டமாகவும், ஈர்ப்பான வர்ணங்களையும் கொண்ட பண்பியல் ஓவியம் அது. “நாங்கள்” என்ற ஓவியத்தை பற்றிய ஜெயலட்சுமியின் குறிப்பு – ஒரு ஆணினதும் பெண்ணினதும் அன்பு உடலின் முழுமையான இணைவு, மற்றும் எந்த ஒரு விடயத்தையும் கொண்டிருக்க முடியாது. காதல் என்பது ஒன்று, ஒவ்வொரு நபரும் அதற்க்கு அடிமை, தாண்டி தங்களின் தனிப்பட்ட அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்வதே அழகு.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *