ஒருத்தியின் இறுதி வரிகள் …

தோழிகளில் எவளோ ஒருத்தி 

செய்து வைத்த அறிமுகம்

ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை

பிறகொரு பொழுதில்

என்னதான் இருக்குமென்று 

உள் நுழைந்தேன்!

அடுக்கடுக்காய் அதீத 

இன்பத்தில் அகம் மகிழ்ந்தேன்!

மனமது மாறியது!

குலுங்க குலுங்க கை குலுக்கினேன்,

எவரென்று தெரியாது 

இருப்பினும் உறவாடினோம்!

எத்தனை இரவுகள் 

எத்தனை பகல்கள், 

வேண்டுமென்றே தொலைத்திருப்பேன்!

வேண்டாமென்று 

புத்தியுள்ளவர்கள் கூறுகையில் 

உமக்கென்ன தெரியும் என்று சாடினேன்!

என்னை கொண்டாடுகையில் 

ஏதோ நானும் சாதித்துவிட்ட பெரும் நிறைவு!

நான் நானாகவே உலாவினேன்,

என்னை சுற்றிய முகங்களனைத்தும்

முகமூடி என்பதை அறியாமல்!

அருகிலிருந்த உறவை உதறினேன் 

எங்கோ இருந்த பதறுகளை நம்பி!

திரைக்கு முன்னாடி அமர்ந்து 

எண்ணியதை எழுதினேன் ஏளனம் கொண்டு!

நொடியில் நூறு விருப்பங்கள் சேருகையில் 

கயிரறுந்த காளையானது மனசு!

காலம் கொடியது, 

காட்சிகள் மாறியது,

என்னின் ஒற்றை புகைப்படம் கொண்டு 

என் வாழ்வை திசை மாற்றினான்

நயவஞ்சக நண்பன்!

எல்லாம் அறிகையில் 
ஆயிரம் நண்பர்களும்,

இருந்த இடத்தில் இருந்தே ஆறுதல் “குறி”

நெஞ்சில் ஏறிய பாரம் 
புத்தியில் உரைத்தது 
நானும் பெண் தானென்று!

போதும், 

இதோ இதுதான் 

என் பயணத்தின் முற்றுபுள்ளி 

என்னை நேசித்த உறவுகளிடம் 

இதையும் சேர்த்து விடும் 

இந்த “அரட்டை குழுமம்”

முகம் தொலைத்தவளின் 
இந்த முகவரி அற்ற கடிதம் 
இன்னொருவளின் திசையை 
சீராக்கினால் போதும் 
நான் சாந்தி அடைவேன்!

karaiseraaalai இணையதளத்திலிருந்து

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *