என் கவிதை

தாய் மடி

ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy

அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது,


இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு


இறைவன் எனக்களித்த இன்பவீடாம் என் ஈழநாடு 


அன்னை மடி தவழ்ந்ததும் அடியெடுத்து நடந்ததும்


அம்மா என்று மொழிந்ததும் ஆளாகி வளர்ந்ததும்


அந்த மண்ணின் நிழலில் அது என்று மென்நினைவுகளில்


வாழ்வியலை வாழ்வறத்தை வாழ்வினூடே கற்றிடவே


வளமான  களம் தந்து புகலாக விளங்கிய  என் தாயகம்


மண்பிரிந்து வாழும் வாழ்வை மனதாலும் நினைத்ததில்லை


தேட்டம் தேடவென்று விட்டது பிடிக்கவென்று புறப்பட்டு


தேசாந்திரம் நாடிவந்து தேடியலைந்து ஓய்ந்த பின்னால்


தேச வாழ்வுக்கு ஈடான தேட்டம் வேறில்லை தெரிகிறது


வாழ்விடமாய் வாய்த்த தேசம் வளமார்ந்த தேசம்தான்


வந்தார்க்கு வாழ்வு காட்டும் வள்ளன்மை மிக்க நாடு


பட்டுத் தூளியிலே பஞ்சணையில் படுத்து ஆடினாலும்


பாசமிகு தாய் மடியே குழந்தை தேடிநாடும்  சொர்க்கமாகும்


எங்கு நாம் வாழ்ந்தாலும் அங்கு நாம் வாழ்ந்த  வாழ்வு 


எப்போதும் அடிமனதில் நினைவலையாய் எழுகிறது


எண்ணத்தில் மிதந்து வரும் ஞாபகங்களை பகிருகிறேன்


தொடர்பாட வழிதந்த தொழில்நுட்பம் வாழ்க வாழ்க

Mrs. Jeyalukshmy. Kanthasamy

Canada

{Retired Teacher,

Uduppiddy Girls College

Srilanka}

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *